×

பேரனை வெட்ட வந்தவர்களை தடுத்ததால் வட்டி தொழில் செய்த பெண் வெட்டிக்கொலை: இருவர் கைது; முக்கிய குற்றவாளிக்கு வலை

திருவொற்றியூர்: எண்ணூரில் முன்விரோத தகராறில் வாலிபரை வெட்ட வந்த எதிர் தரப்பினர், அவர் இல்லாததால் வீட்டு வாசலில் அமர்ந்திருந்த பாட்டியை வெட்டி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. எண்ணூர், சத்தியவாணி முத்து நகர் 2வது தெருவை சேர்ந்தவர் பாக்கியம் (65). அதே பகுதியில் பலருக்கு வட்டிக்கு பணம் கொடுத்து வந்தார். இவர் நேற்று முன்தினம் இரவு வீட்டு வாசலில் அமர்ந்திருந்தார். அப்போது, பைக்கில் வந்த 3 மர்ம நபர்கள் அவரை சுற்றி வளைத்து, கத்தியால் சரமாரியாக வெட்டி விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர். இதில் பாக்கியத்திற்கு தலை மற்றும் கழுத்து பகுதியில் பலத்த வெட்டுக் காயங்கள் ஏற்பட்டு ரத்தம் வெளியேறி துடிதுடித்தார். உடனே அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து எண்ணூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ் வழக்கு பதிவு செய்து, உதவி போலீஸ் கமிஷனர் வீரக்குமார் உத்தரவின்படி, விசாரணை மேற்கொண்டார். அதில், பாக்கியத்தின் பேரன் மகி (22), திருவொற்றியூரில் வசித்து வருகிறார். இவர்மீது பல்வேறு வழக்குகள் உள்ளன. இவரும், எண்ணூர் சந்தோஷ்குமார், விக்னேஷ் ஆகிய 3 பேரும் நண்பர்கள். இந்நிலையில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு, எண்ணூர் அண்ணா நகரை சேர்ந்த ஜீவராஜ் (25) என்பவருக்கும், சந்தோஷ்குமார், மகி, விக்னேஷ் ஆகியோருக்குமிடையே ஒரு பெண்ணை காதலிப்பது தொடர்பாக தகராறு ஏற்பட்டுள்ளது.

இந்த தகராறு முற்றிய நிலையில் ஜீவராஜை இவர்கள் 3 பேரும் சேர்ந்து கடந்த மாதம் வெட்டியுள்ளனர். இந்த வழக்கில் மூவரும் எண்ணூர் போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறைக்கு சென்று, கடந்த வாரம் ஜாமீனில் வெளியில் வந்தனர். இதனிடையே காயமடைந்த ஜீவராஜ் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளார். இதை தொடர்ந்து தன்னை வெட்டியவர்களை பழிதீர்க்க ஜீவராஜ் முடிவு செய்து நேற்று முன்தினம் இரவு தனது சக நண்பர்கள் 2 பேருடன் எண்ணூர் பகுதியில் மூவரையும் தேடி பைக்கில் வலம் வந்துள்ளார். அப்போது மூவரையும் காணவில்லை.

இதையடுத்து சத்தியவாணி முத்து நகருக்கு வந்த ஜீவராஜ், மகியின் பாட்டி பாக்கியம்மாவிடம் மகியை பற்றி விசாரித்துள்ளார். அப்போது தனக்கு தெரியாது என்று அவர் தெரிவித்துள்ளார். இதில் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில் ஆத்திரமடைந்த ஜீவராஜ், பாக்கியம்மாளை சரமாரியாக வெட்டி கொலை செய்துவிட்டு அங்கிருந்து சக நண்பர்களுடன் தப்பிச் சென்றது தெரிய வந்தது. போலீசார் தனிப்படை அமைத்து, இந்த கொலை வழக்கில் தொடர்புடைய மீஞ்சூரை சேர்ந்த அஜய் (26), செங்கல்பட்டை சேர்ந்த விக்ரம் (23) ஆகிய இருவரை போலீசார் நேற்று கைது செய்தனர். முக்கிய குற்றவாளியான ஜீவராஜ் என்பவர் தலைமறைவாகி விட்டார். அவரை போலீசார் தேடி வருகின்றனர்.

The post பேரனை வெட்ட வந்தவர்களை தடுத்ததால் வட்டி தொழில் செய்த பெண் வெட்டிக்கொலை: இருவர் கைது; முக்கிய குற்றவாளிக்கு வலை appeared first on Dinakaran.

Tags : Tiruvottiyur ,Ennoor ,Bhakyam ,2nd Street, Sathyavani Muthu Nagar, Ennore.… ,
× RELATED வாலிபரை பழிதீர்க்க வேண்டும் என்ற...